“அறிவால் விழித்தெழுவோம் - அனர்த்தத்தை குறைப்போம்” எனும் தொனிப்பொருளில் அதிகரித்துவரும் அனர்த்தம் மற்றும் டெங்கு நோய்களினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்குடன் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு செங்கலடி பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் அமைந்துள்ள நான்கு கிராமங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இன்று குறித்த சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து இளைஞர் யுவதிகளின் ஆளுமை விருத்தியை உயர்வடைய செய்யும் முகமாகவும் கிராமங்கள் இடையே பரவி வரும் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நெறியாகவும் குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கோப்பாவெளி கிராமத்தில் சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை பதுளை வீதியிலுள்ள வெளிக்காகண்டி, புல்லுமலை, கித்துல் உறுகாமம் போன்ற பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.